30 கோடிக்கு எங்க போய் முட்டுவது.. தலையை உடைத்துக் கொண்டிருக்கும் சசிகலா குடும்பம்!
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 30 கோடி அபராதத் தொகையை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளதாம் சசிகலா குடும்பம்.
அபராதத் தொகையைக் கட்டிய அடுத்த நிமிடமே, இதை எப்படித் திரட்டினீர்கள் என்று கணக்கு கேட்டு வருமான வரித்துறை வந்து நிற்கும் என்பதால் அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இவர்களின் மிகப்பெரிய கவலை + குழப்பமாக உள்ளதாம்.
இதனால் இந்தப் பணத்தை எப்படி கட்டுவது. கட்டினால் சிக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்பது குறித்து நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோர் வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனராம்.

தலைக்கு ரூ. 10 கோடி
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் தற்போது பெங்களூ சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.

30 கோடிக்கு எங்கு போவது
நடராஜன், சசிகலா குடும்பத்துக்கு பணத்திற்குப் பஞ்சம் என்று சொன்னால் அதை அந்த பஞ்சம் கூட நம்பாது. இருப்பினும் இது கோர்ட் விவகாரம். கட்டும் பணத்திற்குக் கணக்கு காட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் வருமான வரித்துறை சும்மா விடாதே.. எனவேதான் பத்து பைசா என்றாலும் கூட கணக்கு வேண்டுமே என்ற கவலையில் உள்ளதாம் சசிகலா குரூப்.

வக்கீல்களுடன் ஆலோசனை
இதுதொடர்பாக நடராஜன் ஒருபக்கம் வக்கீல்களுடன் விவாதித்துக் கொண்டுள்ளார். மறுபக்கம் தனது வக்கீல்களை சிறைக்கு வரவைத்து சசிகலாவும் ஆலோசித்துள்ளார். அதில் பணத்தைப் புரட்டுவது தொடர்பாக பல்வேறு உபாயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

சிக்கல்தானாம்
கணக்குக் காட்டக் கூடிய வகையில் எந்தத் தொழிலும் இவர்களிடம் இல்லை. எனவே 30 கோடி பணத்தையும் கட்டுவது பெரும் சிக்கலாக உள்ளதாம். கணக்குக் காட்டும் வழி குறித்து இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்களாம். பணத்தைக் கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு வருடம் கம்பி எண்ண வேண்டும் என்பது முக்கியமானது.












Click it and Unblock the Notifications