தேவகோட்டை பள்ளியில் என்.எம்.எம்.எஸ். தேர்வு எழுதுவதற்காக பயிற்சி - மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!
தேவகோட்டை: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சி (NMMS ) வகுப்புகள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
என்.எம்.எம்.எஸ். தேர்வை அனைத்து பள்ளி மாணவர்களும் எழுதலாம். இத்தேர்வு எழுத 7-ம் வகுப்பில் முழு ஆண்டு தேர்வில் 55% மதிப்பெண்களுக்கு குறையாமலும், SC/ST மாணவர்கள் 50% மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தாலும் போதுமானது.
மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ரூ1,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களாகவும் இருக்க வேண்டும்.
பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் இந்த தேர்வு பற்றிய அறிவுப்பு வெளிவரும். மேலும் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அரசால் அந்தந்த ஆண்டில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
என்.எம்.எம்.எஸ்.தேர்வானது இரு பகுதிகளை மனதிறன் தேர்வு, படிப்பறிவு திறன் தேர்வு என இரு பகுதிகளைக் கொண்டது. மனத்திறன் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் அளிக்கப்படும்.
படிப்பறிவு திறன் தேர்வானது (SAT) மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும். இத்தேர்வில் 7ம் வகுப்பு அறிவியில்,கணக்கு,சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் 8 ம் வகுப்பு அறிவியல்,கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.
இந்த தேர்வுகளை எப்படி எழுதுவது என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இப்பயிற்சி நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உமா மஹேஸ்வரி, கற்பக செல்வி, கவிதா, அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆதஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மோகன், கணித பட்டதாரி ஆசிரியர் சசிகலா, மாரந்தை ஊராட்சி ஒன்றிய பட்டதாரி ஆசிரியர் பாலகுரு ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயற்சி அளித்தார்கள்.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாகவும், தேர்வு குறித்தும், மனத்திறன் தேர்வில் எண், எழுத்து தொடர்கள், ஆங்கில அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல், வெண் படங்கள், ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல், சிந்தனை கேள்விகள், கனசதுரம் அமைத்தல், வார்த்தை அமைப்பு, கணித முறை, நுண்ணறிவுத் திறன் ஆகியன பற்றியும், கேள்விகள் அமைப்பு, பதில் அளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பதில் அளித்தனர். பயற்சி ஆசிரியர்களும் மாணவர்களின் தன்னார்வத்தை பாராட்டி கூடுதல் பயற்சி அளித்தனர்.
இத்தேர்வின் மூலம் மாணவர்கள் விரி சிந்தனை, சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல், பகுத்தறிவும் திறன் ஆகியவை மேம்படும். இதனால் தங்களின் வாழ்வியல் சிக்கலுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது.
இத்தேர்வானது மாணவர்கள் தங்கள் வரும் காலத்தில் எழுதவுள்ள பல போட்டி தேர்வுகளுக்கு (RTSE, NTSE, SSC, TNPSC, RRB, UPSC) அடிப்படையாகவும்,தூண்டுகோலாகவும் அமையும்.
இப் பயற்சியை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் சக ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் விளக்கம் அளித்து பேசினார். இந்த தேர்வு குறித்தும் இதில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், தேர்வு முடியும் வரை பெற்றோர்கள் எவ்வாறு மாணவர்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இத்தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.500 அரசால் வழங்கப்படுகிறது. இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் திருப்பாக்கோட்டை, கொடிக்குளம், தேவண்ட தாவு, மங்களம், வெங்களூர் இளங்கோ பள்ளி, வடகீழ்குடி அரசு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
பெருவாரியான பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து மிக குறைந்த விலையில் மனத்திறன் தேர்விற்கான புத்தகத்தையும் வெளியிட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சியானது மிகுந்த உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.