அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான குடும்பக் கட்டுப்பாடு... எச்.ராஜா பேச்சு!
சென்னை: மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என்று பேசியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
மத பாரபட்சம் இல்லாமல், ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகள் மட்டுமே பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் ராஜா. அப்போது அவர் கூறியதாவது:
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மத மாற்றத்தை கடுமையாக கொண்டுள்ளனர். இதனால், இன்னும் 100 ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்றும், அதன்பிறகு காஷ்மீரில் இந்துக்களுக்கு என்ன நடக்கிறதோ? அது தான் நாடு முழுவதும் நடைபெறும் என்ற அச்ச உணர்வும் இந்து தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமும் ஏன் மதமாற்றம் செய்யக்கூடாது என்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. இந்துக்களின் விழாக்களில் யாரையும் மதம் மாறுங்கள் என்றோ? பிற மதத்தை இழிவுபடுத்தியோ கூறுவது இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் தங்களின் பிரார்த்தனை கூட்டங்களில் இயேசுவை தவிர பிசாசுகளை வணங்காதீர்கள் என்று இந்து கடவுள்களை கூறுகின்றனர்.
பொதுவாக மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். ஒரு தம்பதிக்கு 2 குழந்தைகள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி என்று கொண்டு வர வேண்டும்.
பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் தென் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்து வது வழக்கம். ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விவாதத்தின் போது, தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசின் இந்த தவறான கொள்கையால், கடந்த மே மாதம், மராட்டியம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
இது குறித்து, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகையை தொடர்ந்து, கடந்த ஜனவரி 13-ந் தேதி, நான் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதினேன். அதில் பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காட்சி பொருள் பட்டியலில் இருந்து எருதின் பெயரை நீக்கி சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் பா.ம.க.வின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. அதற்கு கட்சி (பா.ஜ.க.) மேலிடம் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது, தே.மு.தி.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் கடைசி நேர பிரசாரம் வரை என்னுடன் இருந்து பிரசாரம் செய்திருக்கிறார். தே.மு.தி.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகள் வரும், சில கட்சிகள் போகும். தேசிய அளவில் ஜனநாயக கூட்டணி தொடர்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications