நான் இனி திமுகவின் கொத்தடிமை இல்லை.. நீக்கப்பட்ட முல்லைவேந்தன்
தர்மபுரி: கடந்த 15 வருடங்களாக கொத்தடிமை போல வைத்திருந்தனர். இப்போது சுதந்திரம் கிடைத்து விட்டது என்று திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து எந்த கட்சி பணியையும் செய்யவிடாமல் முடக்கி வைத்திருந்தனர். இப்போது எனக்கு நல்லதை செய்துள்ளனர். இனி நான் சுதந்திரமாக எங்கும் எதையும் பேசலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நான், கே.பி.ராமலிங்கம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்பட பல பேருக்கு கட்சி நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் மீது வந்துள்ள புகார்கள் எல்லாம் காழ்ப்புணர்ச்சி காரணமாக வந்த புகார்கள் என விளக்கம் எழுதி கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொது செயலாளர் அன்பழகன் கூறினார்.
அப்படி காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் கூறியிருந்தவர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா தளி பகுதியில் கட்சியை வளர்த்தேன். இதை அவர்கள் மறந்து விட்டார்கள். சிறகை உடைத்து விட்டு பறக்க சொல்பவர்கள் அவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்தில் எதையும் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டு கொத்தடிமைகளாக வைத்திருந்தார்கள். கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் மீது இந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் எல்லாம் இன்றும் தங்களை தி.மு.க.வினர் எனக் காட்டிக்கொள்கின்றனர். இனிமேல் மாவட்டத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை சுதந்திரமாக செய்யலாம் என்றார் முல்லைவேந்தன்.












Click it and Unblock the Notifications