நான் சாதாரண ஆள், எம்.ஜி.ஆர் அல்ல புதுக் கட்சி தொடங்குவதற்கு- அழகிரி
ஆரணி: நான் எம்.ஜி.ஆர். அல்ல, புதுக் கட்சியெல்லாம் தொடங்க மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இன்று மு.க.அழகிரி ஆரணிக்கு வந்தார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை ஏழுமலையைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆரணிக்கு வந்த அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும் அசத்தினர்.
பின்னர் ஏழுமலை வீட்டில் வைத்து செய்தியார்களிடம் அழகிரி பேசுகையில், நான் இன்னும் தி.மு.க.வில் தான் இருக்கிறேன். இந்த கட்சியில் எனக்கு உரிமை இருக்கிறது.
இந்த கட்சியில் எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள். என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தூண்டிவிட்ட பினாமிகள், ஏஜெண்டுகள் மீது தேர்தலுக்கு பிறகு இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கைகள் பாயும். அது எந்தவிதமான நடவடிக்கை என்று இப்போது சொல்ல முடியாது.
நான் மாநில அளவில் யாரையும் ஒருங்கிணைக்கவில்லை. மாவட்ட அளவில் எனது ஆதரவாளர்களை சந்தித்து ஒருங்கிணைத்தேன் என்றார் அழகிரி.
எம்.ஜி.ஆர், வைகோ போல நீங்களும் புதுக் கட்சி ஆரம்பிப்பீர்களா என்ற கேள்விக்கு நான் எம்.ஜி. ஆர் அல்ல என்றார் அவர் சிரித்தபடி.
அடுத்து தஞ்சாவூரில் ஏப்ரல் 2ம் தேதியும், தொடர்ந்து விருதுநகர், அருப்புக்கோட்டையிலும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம் அழகிரி.