புதுவையின் அனைத்து நிர்வாகப் பணிக்கும் நானே பொறுப்பு - ஆளுநர் கிரண்பேடி அதிரடி
புதுச்சேரியில் அனைத்து நிர்வாகத்திற்கும் தாமே பொறுப்பு என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு நிர்வாகப் பணிகளுக்கும் தாமே பொறுப்பு என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவிப்பதை தடைசெய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக ரத்து செய்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து நிர்வாகத்திற்கு நானே பொறுப்பு என ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநில அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பாளர். ஆளுநர் அலுவலகம் வெறும் அஞ்சல் அலுவலகமாக இருக்காது. புதுவை மக்களுக்கு இனி மாதம் ஒரு முறை கடிதம் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.
நிதி மதிப்பீடுகளில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவேன் என்றும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி, யாருக்கும் சாதகமின்றி அமல்படுத்துவேன் என்றும் தனது கடிதத்தில் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.