தேர்தல் கருத்துகணிப்புகளை எல்லாம் நம்புவது இல்லை: மு.க. ஸ்டாலின்
சென்னை: தேர்தல் கருத்துகணிப்புகளை எல்லாம் தான் நம்புவது இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கோவையில் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், அண்மையில் வெளியான கருத்துகணிப்பில் திமுகவுக்கு வரும் தேர்தலில் சில இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் கருத்துகணிப்புகளை எல்லாம் நம்புவது இல்லை. அதனால் அது பற்றி கவலை இல்லை என்றார். உடனே அவரிடம், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லையே என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றார்.