சசிகலா தரப்பு மிரட்டுவதாக வழக்கு..ஆள தெரியாத ஸ்டாலின் அரசை நம்பி நான் இல்ல..கொந்தளித்த சிவி சண்முகம்
திண்டிவனம்: சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை இதுவரை விசாரிக்காமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அதிமுக எம்.பி சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்.
சசிகலா ஆதரவாளர்கள் மீது, தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திண்டிவனம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிவி சண்முகம் கூறியதாவது:- என்னுடைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஆபசமாக பேசுதல்..அச்சுறுத்தல் விடுப்பது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பலமுறை புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புகார்கள் மீது இன்று வரை திமுக அரசு மற்றும் அதனுடைய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கையாலாக அரசு, ஆளத் தெரியாத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியாத இந்த ஸ்டாலின் அரசை நம்பி எதிர்பார்த்து நான் இல்லை, திரும்பவும் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென இந்த அரசிடம் நான் எதிர்பார்க்கவும் இல்லை. அந்த தேவையும் எனக்கு இல்லை. பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடுக்கவில்லை.
எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசினுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சொல்லுங்கள்.. நான் என்னுடைய வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்பதுதான் எனது வழக்கு.. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழக காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வந்ததும் நான் எங்கெல்லாம் புகார் கொடுத்தேனே அங்கெல்லாம் Mistake of fact என சொல்லி வழக்கை வேக வேகமாக முடிக்கிறார்கள். ஒரு வழக்கிலும் விசாரிக்கப்படவில்லை.
இதுவரை நான் 15 புகார்கள் கொடுத்துள்ளேன். ஒரு புகாரில் கூட , எதிர் தரப்பினர் மீதும் என்னை நேரடியாக விசாரிக்கவில்லை. இந்த குறிப்பிட்ட வழக்கில் சசிகலா ஆதரவாளர்கள் என சொல்லிக்கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்ன வழக்கை முடித்து வைத்து இருக்கிறார்கள். விசாரணை செய்யப்படவில்லை.

புகார் கொடுத்த என்னிடமும் விசாரிக்கவில்லை. ஆனால் விசாரணை நடத்தியதாக பொய்யான தகவலை ஸ்டாலின் அரசின் போலீஸ் வழக்கை முடித்து வைத்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை மீண்டும் மறுவிசாரணை செய்ய வேண்டும். இந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை மறு விசாரணை செய்து சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications