தமிழிசைக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை: வைகோ
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான் எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மேலும், கூட்டணி குறித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பேச்சுக்கு பதில் சொல்லி தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ‘தமிழகத்தை போராட்டக் களத்திலேயே வைத்திருக்க வைகோ விரும்புகிறார். அவர் உள்பட ஐந்து கட்சிகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டியக்கம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை' என விமர்சித்திருந்தார்.

மேலும், வைகோ தலைமையிலான கூட்டணியில் தற்போதே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்கள் எப்படி மக்களை சந்திக்க போகிறார்கள். அவர்களுடைய கூட்டணி பலம் பெறபோவதும் இல்லை, தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிட போவதில்லை. மாறாக பலவீனமாகத் தான் போகப்போகிறது' என தமிழிசை கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. விமானநிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான். இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் அடிபட்டு உதைப்பட வேண்டிய நிலை தான் உள்ளது. மத்திய அரசு முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறது.
திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இது திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை பிரகடனம் செய்யும் மாநாடாக இருக்கும்' என்றார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் கூட்டு இயக்கம் குறித்த தமிழிசையின் விமர்சனம் குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை' எனப் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications