திமுகவை தட்டி கேட்கும் உரிமை உள்ளது: பேஸ்புக்கில் அழகிரி பதிலடி
சென்னை: திமுகவுக்காக கூடுதலாக உழைத்து, பலமுறை சிறை சென்று எனக்கு கட்சி தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் உரிமைவுள்ளது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் என்று சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு பதிலடி தரும் விதமாகவே இதனை பதிவிட்டுள்ளார் அழகிரி.
இதுதொடர்பாக அழகிரியின் பெயரில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள கருத்து:
திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என,என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக ...
Posted by MK Alagiri onMonday, February 15, 2016
"திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என,என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன்.
நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இதற்கான உடன்படிக்கை சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இது குறித்து கருத்து கூறிய அழகிரி, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்றும், அ.தி.மு.க.வை எந்தக் கூட்டணியும் வெல்ல முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, "திமுக வளர்ச்சியைக் கெடுக்கும் வகையிலும், கழகத்தின் எழுச்சியைக் குலைப்பதற்காகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு பேட்டி கொடுக்கும் அழகிரியின் கருத்துகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாகவே, திமுகவுக்காக கூடுதலாக உழைத்து, பலமுறை சிறை சென்று எனக்கு கட்சி தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் உரிமைவுள்ளது என்று மு.க.அழகிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு கருணாநிதியிடம் இருந்து என்ன அறிக்கை வரப்போகிறதோ தெரியலையே?