எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் பக்கம்... சொல்வது டிராபிக் ராமசாமி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவிற்காக அமைச்சர்கள் மொத்தமாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடும் சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆள் படை பலம் எதுவுமின்றி வாக்கு சேகரித்து வருகிறார்.
எம்.ஜி.ஆரை அதிமுகவினரே கண்டுகொள்ளாத நிலையில் திடீரென எம்.ஜி.ஆர் வேடமணிந்து ரிக்ஷாவில் அமர்ந்து வாக்கு சேகரிக்கிறார். கொளுத்தும் வெயிலில் சில மணிநேரங்களே பிரச்சாரம் என்றாலும் மக்கள் ஆதரவு தனக்குத்தான் என்பது டிராபிக் ராமசாமியின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் அதிமுகவினர் என்று குற்றம்சாட்டுகள் ஒருபக்கம் இருக்க, போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்று புகார் பட்டியல் வாசிக்கிறார். ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையதளத்திற்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியை படியுங்களேன்.

என் பக்கம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்
பெங்களூருவில் இருந்து அதிமுகவினரும், எம்.ஜி.ஆர் ரசிகர்களும் எனக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளனர். அவர்கள்தான் தொப்பியை அணிந்து ரிக்ஷாவில் வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்களும் எனக்காக வாக்கு சேகரிக்க வருகின்றனர்.

அதிமுகவினர் ஆதரவு
எம்.ஜி.ஆர் வேடம் போட்டு நான் பிரச்சாரம் செய்வதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதிமுகவில் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும் என்பக்கம் இருக்கின்றனர்.
ஆவின் பாஸ்கர் என்பவர் என்னுடன் பிரச்சாரத்திற்கு வருகிறார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

கொலை மிரட்டல்
தேர்தலில் போட்டியிடும் போது ஆளுங்கட்சியினர் தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை.

என்னிடம் தோற்க பயம்
தேர்தலில் தோல்வியோ வெற்றியோ ஜெயலலிதாவிற்கு என்னை வென்றதாக இருக்கக் கூடாது. அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகளை போட்டியிட வைத்துள்ளார். இதுவும் ஜெயலலிதாவின் திட்டம்தான். வேட்பாளர் சி.மகேந்திரன் இதில் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்.

அரசியல் மாற்றம்
நான் தேர்தலில் போட்டியிடுவது ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.

ஆதரவு கேட்டது ஏன்?
தேர்தலில் வேட்பாளராக நிற்க வந்துவிட்டேன் எனவேதான் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போனோன். கொலைகாரன் திருந்தினால் பாராட்டுகிறோம். திருந்தி வந்துவிட்டால் அவர்களை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோலத்தான் அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டேன்.

ஆதரவு கிடைக்கும்
தேமுதிகவினரின் ஆதரவு எனக்கு உள்ளது. திமுகவினரின் வாக்குகளும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் காங்கிரஸ் மது ஒழிப்பு இயக்கம், ஊழல் ஒழிப்பு இயக்கம் போன்ற அமைப்புகள் எனக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம்
ஆர்.கே.நகரில் அதிமுகவினர் கும்பல் கும்பலாக பணம் கொடுக்கின்றனர். நான் படம் எடுத்தால் ஓடிப்போய்விடுகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் பணம் கொடுக்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கண்டு கொள்ளாத அதிகாரிகள்
அதிமுகவினரின் அராஜகங்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. இது சட்டவிரோதமான தேர்தல். ஒரு ஆண்டில் பொதுத்தேர்தல் வரப்போகிறது. மக்கள் வரிப்பணம் வீணாடிக்கப்படுகிறது. நானே ஜெயித்தாலும் வழக்கு போடுவேன் என்று அதிரடியாக கூறுகிறார் இந்த ஒன்மேன் ஆர்மி டிராபிக் ராமசாமி.












Click it and Unblock the Notifications