காவிரி விவகாரம் போராட்டம் திருச்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும்- தூத்துக்குடி செல்லும் கமல் பேட்டி
காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதை திருச்சியில் அறிவிப்பேன் என நடிகர் கமல் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து திருச்சியில் அறிவிக்கப்படும் என்று நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே கமல் குரல் கொடுத்து வருகிறார்.
மக்களின் பிரதிநிதியாக என்னுடைய கடமை என்பதால் தூத்துக்குடி போராட்டத்திற்கு செல்ல போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று தானும் வலியுறுத்தப் போவதாகவும் ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்திருந்தார் கமல்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றார்.
காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம் என்றார். காவிரி விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பதுபோல் அரசியலிலும் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால் காவிரி விவகாரத்திற்காக மக்கள் நீதி மையம் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும், காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஏப்ரல் 4-ல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.