அ.தி.மு.க.வை அழிய விடமாட்டேன்.. சொல்வது சசிகலா அல்ல, வைகோ!
அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்பது நமது திராவிட இயக்கத்தின் ஜென்ம விரோதிகளின் இலக்கு. அதற்கு, நான் விடமாட்டேன் என்றார் வைகோ.
சென்னை: சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது முதல் பேசாமல் அடக்கி வாசித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது திமுக குறித்து காரசாரமாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்.
நாகர்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று வைகோ பேசுகையில், அரசியல் காரம் தெறித்தது.
வைகோ கூறியதாவது: அண்ணா ஒருமுறை, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு வரும் வழியில், டீ குடிக்க கடையில் வண்டியை நிறுத்தினார். அப்போது, வண்டியிலிருந்த கறுப்பு சிவப்பு வண்ண கொடியைப் பார்த்த கடைக்காரர், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்.

எம்ஜிஆருக்குதான் டிமாண்ட்
அப்போது அருகில் இருந்தவர், 'பேரறிஞர் அண்ணாவான உங்களிடமே எம்.ஜி.ஆரை பற்றிதானே கேட்கிறார்கள்?' என்றார். அதற்கு அண்ணா, எம்.ஜி .ஆரை கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயங்களிலே வைத்திருக்கிறார்கள். அது இந்த இயக்கத்துக்குத் தேவை, என்றார்.

ஆட்சி கலைப்பு
ஆனால், இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துவிட்டதால் ஊருக்குள்ளே போக முடியாது, ஆட்சியைக் கலைக்க வேண்டும். ஜனாதிபதியின் ஆட்சி வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் கூடாரத்தில் கூக்குரல் கேட்கிறது.

திமுக ஏற்பாடு
எம்.எல்.ஏ க்கள் ஊருக்குப் போக முடியாது என்கிறார்களே ஏன் தெரியுமா? தி.மு.க.வினர் ஒவ்வொரு இடத்திலும் ஆட்களைத் தயார் செய்துள்ளனர். கரை வேட்டி தவிர்த்து, பேன்ட் சர்ட்டிலே வந்து பொது மக்களைப்போல கூச்சலிடுகிறார்கள். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறார்கள்.

திமுக எம்.எல்.ஏக்களுக்கும் அதே நிலை
எம்.எல்.ஏ. வீட்டுக்கு போக முடியாவிட்டால் ஆட்சியை கலைத்து விட முடியாது. 1972 அக்டோபர் 10ல், எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெருவுக்குள் போக முடியவில்லை. அந்த காலகட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களைப் பத்து நிமிடத்தில் பொதுமக்கள் கல்லெறிந்து விரட்டினார்கள். அப்போது ஆட்சியைக் கலைக்கச் சொல்லவில்லையே.

மீம்ஸ் போடுறாங்கப்பா
இப்போது என்னை மிகவும் இழிவுபடுத்தி சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போடுகிறார்கள். என் வீட்டு முகவரியைப் போட்டு, தொலைபேசி எண்ணைப் போட்டு, நெருப்பால் இவனைச் சுடுங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். ஒரு லைக்குக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், நான் பிரளயங்களையும், எரிமலைகளையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வாழ்கிறவன்.

அழியவிடமாட்டேன்
பெரியார், அண்ணா போன்றவர்கள் வளர்த்த திராவிட இயக்கம் அழிந்துவிடக்கூடாது என நினைப்பவன் நான். எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியிலே போடவில்லை என்றால், அண்ணாவின் படமே உலகுக்குத் தெரிந்திருக்காது. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியில் அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்பது நமது திராவிட இயக்கத்தின் ஜென்ம விரோதிகளின் இலக்கு. அதற்கு, நான் விடமாட்டேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications