தமிழகத்தில் உருவாகும் புது மாவட்டம்! கடலூரில் இருந்து பிரியும் விருத்தாசலம்? பிரேமலதா போடும் பிளான்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்த தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் தான் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் குரல் எழுப்புவேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரேமலதா விஜயகாந்த் மொத்தம் 69,351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தவெக வேட்பாளர் விஜய் 66,964 ஓட்டுகள் வாங்கி 2,387 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தான் இன்று முதல் 3 நாட்கள் பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறி வருகிறார். அதன்படி இன்று காலையில் பிரேமலதா விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்குறுதிகளை நிறைவேற்ற...
''தொகுதிக்காக நான் கொடுத்த வாக்குறுதிகளை சட்டசபையில் பேசி இப்போது ஆட்சியில் இருக்கும் முதல்வரிடம் நிறைவேற்ற வலியுறுத்துவேன். துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து நிறைவேற்றும்படி கூறுவேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெறுவேன். நான் இன்னும் சட்டசபையில் கன்னி பேச்சையே தொடங்கவில்லை. வெறும் இன்ட்ரோடெக்ஷன் தான் போயுள்ளது.
விருத்தாசலம் தனி மாவட்டம்
தொகுதிக்கான பேச்சு, இலாகாக்கான பேச்சு வருகிறபோது விருதாசலம் தொகுதிக்காக பேசுவேன். விருதாசலத்தை முதலில் மாவட்டமாக மாற்றுவது தான் என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும். அதனை வாக்குறுதியாக கூறியிருக்கிறேன். அதனை சட்டபையில் பேசி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாவட்டமாக மாற்ற எல்லா விதத்திலும் முயற்சி எடுப்பேன்'' என்றார்.
9 சட்டசபை தொகுதிகள்
தற்போது விருத்தாசலம் கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் உள்ளது. இங்கு மொத்தம் 10 தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமண்ணார்கோயில் (தனி) என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பிரேமலதா வாக்குறுதி
இதனால் மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் எளிதில் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் எரிய நிர்வாகத்திற்காக கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதிக்கான வாக்குறுதியாக அறிவித்து இருந்த நிலையில் அதை நோக்கி செயல்பட உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications