வரலாறு தெரியலைன்னா எனக்கு போன்போடுங்க கமல்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாவிட்டால் என்னிடம் போன் போட்டு சந்தேகம் கேட்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் கனரா வங்கியின் டிஜிட்டல் வங்கித் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் குத்துவிளக்கேற்றி தொடக்க விழாவில் பங்கேற்றார் கமல்ஹாசன்.
அப்போது அவர் பேசுகையில், இளைய இந்தியா டிஜிட்டல் உலகத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம்தான், புதிய வழித்தடம் என்றார். டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பொழுதுபோக்கு என்றெல்லாம் மாறவேண்டும். டிஜிட்டலில் உலக முன்னோடிகளாக நாம் செய்யும் சாதனைகள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
தமிழகத்தில் மாற்றம்
என் ஆயுளுக்குள் இந்த சாதனைகளை நடக்கப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். தமிழ்நாட்டில் இன்னும் பல சாதனைகள் நிகழ்வேண்டும் என்று ஆசைப்படுகிற தொண்டர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார்.
எந்த உலகத்தில் இருக்கிறார்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது: கமல்ஹாசன் எந்த உலகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்கு, வரலாறு தெரியாவிட்டால் என்னிடம் போன் போட்டு கேட்கலாம். அம்மா ஆட்சியில் நாங்கள் என்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்று அவருக்கு சொல்கிறேன்.
ஏற்கனவே அப்படித்தான்
தமிழ்நாடு ஏற்கனவே டிஜிட்டல்மயமாகிவிட்டது. 2001ம் ஆண்டில் இருந்தே தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இப்போது வந்து கொண்டு டிஜிட்டல்மயமாக வேண்டும் என்று கமல் பேசியுள்ளது அவரது அறியாமைத்தான் காட்டுகிறது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயக்குமாரின் பதிலடிகள்
நடிகர் கமல்ஹாசன் குறித்து எப்போதுமே அமைச்சர் ஜெயக்குமார்தான் பதிலடி கொடுப்பது வழக்கமாக உள்ளது. வேறு அமைச்சர் யாருமே கமல் குறித்து கருத்து கூறுவது இல்லை.