பாஜக போட்டியிடாவிட்டால் ஆர்.கே.நகரில் நாங்கள் போட்டியிடுவோம்: பாரிவேந்தர்
தஞ்சாவூர்: சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை எனில், இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருந்தார் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது :-
கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் கட்சி தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இலவசங்களை கொடுத்து வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள். மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன் வருவதில்லை. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் பல இளைஞர்களின் உயிரை காப்பாற்ற முடியும். பல பெண்களின் தாலியைக் காப்பாற்ற முடியும். தமிழகத்தில் மின் தடை நீக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. உரம் கிடைப்பதில்லை. தமிழகத்தில் 90 லட்சம் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முன் வரவேண்டும்.
ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேவையற்றது. இன்னும் 8 மாதத்தில் சட்டசபைக்கு பொதுத்தேர்தல் வர உள்ளது. அதற்கிடையே இந்த தேர்தலை அவசர அவசரமாக நடத்துகிறார்கள். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
இப்போது எங்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் தோழமை கொண்டுள்ளது. அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்கள் நிலைமையை அறிவிக்கவில்லை. அவர்கள் போட்டியிடாவிட்டால் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும்.
பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைமை தோழமை கட்சிகளுடன் எந்தவொரு பிரச்சனையிலும் கலந்து ஆலோசிப்பதில்லை. இது குறித்து பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் பேசி உள்ளோம்.
மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் சுமூக உறவு வைத்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை வலுப்படுத்தி தண்ணீரை தேக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகள் ஏற்படுத்தி தண்ணீரை தேக்க வேண்டும். மேகி நூடுல்ஸ் போன்ற தயாரிப்புகளில் அதன் தரத்தை 100 சதவீதம் உறுதிப்படுத்தி கொண்ட பின்னர் அப்பொருட்களின் விளம்பரத்தில் நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications