ம.ந.கூட்டணிக்கு வாக்களிப்பது மக்கள் தங்களை ஏமாற்றிக் கொள்ளும் செயல்: இல.கணேசன்
சேலம்: மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிப்பது, மக்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சேலத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பேரவை நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டிருந்தால் மக்களே அவருக்கு மதிப்பெண் கொடுத்திருப்பார்கள்.

தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைவது நல்லதல்ல. ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தால்தான் நல்லது.
மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிப்பது, மக்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தைப் பொருத்தவரை சேலம், கடலூர், தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரத்தின்போது கலவரத்தை தூண்ட வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. திருவிழாபோல நடக்க வேண்டிய தேர்தல் சில கட்சிகளின் நடவடிக்கையால் யுத்தக் களமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான் விபத்து நடக்கிறது. எனவே, தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பூரண மது விலக்கைக் கொண்டு வர வேண்டும். இதன்மூலம், சாலை விபத்துகள் குறையும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications