சாராய சப்ளை சகுந்தலா.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மேலும் ஒரு பெண் கைது!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ், விஜயா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்திரா, சூசை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்தராஜுக்கு விற்பனை செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சகுந்தலா சட்டவிரோதமாக சாராயத்தை சப்ளை செய்து வந்தது விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது.
இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications