ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்... கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி...
நாகர்கோவில் : ஜம்மு- காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகள் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியானார்.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணலிக்கரையை சேர்ந்தவர் தர்மராஜ். தொழிலாளியான இவரது 22 வயது மகன் அனிஷ் கடந்த 4 ஆண்டுகளாக ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 7-ந்தேதி இரவு பெற்றோருடன் தொலைபேசியில் பேசிவிட்டு அனிஷ் பணிக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவத்தில் பணியாற்றும் அவரது சக நண்பர்கள், மணலிக்கரையில் உள்ள அனிஷ் வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், அனிஷ் ரோந்து சென்ற போது அவரை தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலை கேட்ட அனிஷின் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிஷூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.