முப்பெரும் விழா கல்வெட்டில் அவசர அவசரமாக பதிக்கப்பட்ட ஓபிஎஸ் பெயர்.. அதிலும் சர்ச்சை!
முப்பெரும் விழா கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அவசர அவசரமாக பதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: முப்பெரும் விழா கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அவசர அவசரமாக பதிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள அதிலும் கழக பொருளாளர் என்று மட்டும் பொறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்து திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் நேற்று அதிமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட வெற்றியை கொண்டாடுவதற்காக இந்த விழா நடைபெற்றது.
ஆனால் இந்த விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.இதுமட்டுமல்லாமல் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவி்ல்லை.

கல்வெட்டில் பெயர்கள்
இந்த விழாவிற்காக 100 அடி உயர கொடிகம்பத்தில் அதிமுகவின் கொடி நிறுவப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பெயர் இல்லை
இந்த கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரும், அதேபோன்று புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படவில்லை.

அவசரஅவசரமாக பெயர் பதிப்பு
இந்த விஷயம் பூதாகரமானதால் திகிலடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக நேற்று மாலை ஓபிஎஸின் பெயரை கல்வெட்டில் பதித்தனர்.ஆனால் கொடிக்கம்பத்தின் மறுபுறத்தில் உள்ள கல்வெட்டின் பக்கவாட்டில் ஓபிஎஸின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டிலும் சர்ச்சை
அதிலும் கழக பொருளாளர் என்றே பொறிக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைமை பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள ஓபிஎஸை வெறும் பொருளாளர் என்றும் மட்டும் எடப்பாடி தரப்பு பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications