என்னடா இது.. பாஜவின் எல். முருகன் உள்பட 8 பேருக்கு வந்த புது சோதனை.. சுயேட்சைகளால் கலக்கம்
திருப்பூர்: முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளை பிரிக்கும் யுக்தியாக ஒரே பெயர் உள்ளவர்கள் களமிறங்குவது அடிக்கடி தேர்தலில் நடக்கும் அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளார்கள்.. ஒரே தொகுதிக்குள் ஒரே பெயரில் வேட்பாளர்கள் இருப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகிறார்கள் இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் கடந்த புதன்கிழமை வெளியிட்டது.
இதன்படி 3,998 வேட்பாளர்களில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

8 தொகுதிகள்
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளார்கள். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன் களம் காண்கிறார். அங்கே ஐ.குணசேகரன், மோ.குணசேகரன் ஆகிய சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளார்கள்.

மடத்துக்குளம்
பல்லடம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முத்துரத்தினம் களம் காண்கிறார் இதே தொகுதியில் மு.முத்துரத்தினம், ல.முத்துரத்தினம் என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் மடத்துக்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரன் களம் காண்கிறார். இதே தொகுதியில் மகேந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

எல் முருகன்
தாராபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். ஆர்.முருகன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதுபோல் தி.மு.க.வேட்பாளராக கயல்விழி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கு.கயல்விழி, பெ.கயல்விழி ஆகியோர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்
காங்கேயம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ந.ராமலிங்கம் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஒரே தொகுதியில் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள். இப்படி ஒரே தொகுதியில் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்கி இருப்பது முக்கிய வேட்பாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

கலக்கம்
அதே வேளையில் வாக்காளர்களும் குழம்ப வாய்ப்பு உள்ளது. அதனால் தான் சின்னத்தை பார்த்து வாக்களிக்குமாறு வீதி வீதியாக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒரு சில நேரங்களில் வேட்பாளர்களின் பெயரை மட்டும் பார்த்து மாற்றி ஓட்டு போடும் சம்பவங்களும் நடப்பது உண்டு. அப்படி பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வாங்கிய சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications