ஸ்டாலினுக்கு தலித் கிறிஸ்துவர்கள் சார்பில் பாராட்டு விழா! கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் அறிவிப்பு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலித் கிறிஸ்துவர்கள் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் அறிவித்துள்ளார்.
கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித் கிறிஸ்துவ மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி அதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தேர்தல் ஆதாயங்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்வதாக கூறினார்.

அதேபோல் தலித் கிருத்துவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான் பேசிய போது, ஸ்டாலினுக்கு தலித் கிறிஸ்துவ சமுதாயம் என்றும் கடமைப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்த விழாவில் பேசிய செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், தலித் கிறிஸ்துவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை, புது விடியலை கொடுக்கின்ற விதத்திலே தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications