உடலில்தான் காயம், மனதில் அல்ல - தீக்காயத்திலும் விடாமல் தேர்வு எழுதிய மாணவி
மதுரை: உடலில் தீக்காயம் பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருந்த பொழுதிலும் தளராமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி எல்லாரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள சின்னபட்டியை சேர்ந்த சலவைத் தொழிலாளி கஜேந்திரன். இவரது மகள் சுவாதிகா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாணவி சுவாதிகா தனது குடிசை வீட்டில் உட்கார்ந்து சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால், சிம்னி விளக்கில் பட்டு கீழே கவிழ்ந்தது. இதில் மண்எண்ணை சிதறி தீ பிடித்தது. இந்த தீ மாணவி சுவாதிகா உடையில் பற்றி எரிந்தது. இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.
உடலில் தீ பிடித்ததும் சுவாதிகா கூச்சல் போட்டு அலறினார். உடனே அவரது பெற்றோர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த சுவாதிகாவை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மாணவி சுவாதிகா படிப்பில் சிறந்து விளங்கினார். தீக்காயம் ஏற்பட்டதால் தன்னால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு விடுமே என்று கவலையடைந்தார். இதுகுறித்த தகவல் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்துக்கு தெரியவந்தது. உடனே அவர் மாணவி மருத்துவமனையில் இருந்தவாறே உதவியாளர் ஒருவர் உதவியுடன் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று ஆங்கிலம் 2 ஆம் தாளை மாணவி சுவாதிகா ஆஸ்பத்திரியில் இருந்தவாரே உதவியாளர் உதவியுடன் எழுதினார்.முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications