"மெட்ரோ" படம் பார்த்து திருடனாக மாறிய சென்னை இளைஞர்!
சென்னை: பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான மெட்ரோ திரைப்படத்தைப் பார்த்து, சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில் 'ஆள்' புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் மெட்ரோ. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் நாளுக்குநாள் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்பதைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்து சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் உதயநிதி என்ற இளைஞர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கானிக்...
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் உதயநிதி. தனது தந்தை கடையிலேயே மெக்கானிகாக வேலை பார்த்து வந்த உதயநிதி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மெட்ரோ...
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மெட்ரோ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்த திரைப்படத்தின் கதைக்களத்தால் ஈர்க்கப்பட்ட அவர், தானும் நகை பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார்.

நகைப் பறிப்பு...
அதன்படி, திருவல்லிகேணி, மைலாப்பூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள பெண்களை நோட்டமிட்டு தொடர்ந்து நகைப்பறிப்பில் ஈடுபடத் தொடங்கினார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொண்டு விற்று ரூ.1 லட்சத்திற்கு மேல் புதிய நகைகளை வாங்கியுள்ளார். மீதமுள்ள பணத்தை சிட் பண்டிலும் மூதலீடு செய்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்...
தொடர்ந்து மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் போலீசார் உஷாரானார்கள். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரே ஆள் தான் நகை பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது.

கைது...
அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் உதயநிதி சிக்கினார். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து ரூ.42ஆயிரம் பணம் மற்றும் 11 சவரன் நகையையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து உதயநிதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மெட்ரோ படத்தைப் பார்த்து நகை பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications