கன்னட அமைப்பினரிடம் சிக்கிய போது நடந்தது என்ன? கர்நாடகாவில் தாக்கப்பட்ட லாரி டிரைவர் பேட்டி
மதுரை: கன்னடம் பேச் சொல்லி கட்டாயப்படுத்தியாகவும், தெரியாது எனக் கூறியதால் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பெங்களூரில் கன்னடர்களால் தாக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சோனமுத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையால் பெங்களூரில் நடந்த வன்முறைகளுக்கு இடையே தமிழக லாரி டிரைவர் ஒருவர் சித்ரதுர்கா அருகே லுங்கி அவிழ்த்து ஜட்டியோடு உட்கார வைத்து அவமானப்படுத்தப்பட்டார். பெங்களூர் அருகே முதியவர் லாரி டிரைவர் கும்பலால் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்டார்.
இந்த வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான லாரி ஓட்டுநர் சோனமுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கன்னட அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து தாக்கினர். லாரியையும் சேதப்படுத்தினர். செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு கன்னடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பேசத் தெரியாது எனக் கூறியதால் அடித்து காயப்படுத்தினர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் என்னை பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தமிழர் என்பதால் அங்கு எனக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர். இதன் பின்னர் தமிழர்கள் சிலரின் உதவியுடன் ஓசூர் வந்து சேர்ந்தேன். அங்கு சிகிச்சை பெற்று தற்போது மதுரையில் வீட்டில் இருப்பதாக கூறினார்.