அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர் பலி... என்னதான் காரணம்?
சென்னை: கடந்த சில நாட்களில் தர்மபுரி மற்றும் சேலம் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த பத்திற்கும் அதிகமான குழந்தைகள் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என பெற்றோர் தரப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் வெளிப்படையாகக் காணப்படும் மருத்துவரீதியான குறைபாடுகள் சில...

நிக்கு வார்டு...
பொதுவாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வரும் குழந்தைகளில், பிறந்தது முதல் 3 மாதம் வரையிலான சிசுக்களுக்கு என பிரத்யேகமாக ‘நிக்கு' எனப்படும் என்.ஐ.சி.யூ வார்டு அமைக்கப் பட்டுள்ளது.

பற்றாக்குறை...
இங்கு குறைந்த எடை, குறை பிரசவம் மற்றும் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்ப் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் படும். இங்கு உயர் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால் சில இடங்களில் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த மருத்துவ உதவி கிடைக்கப் பெறாமல் போவதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

குளிர்சாதன வசதி...
அதேபோல், இந்த நிக்கு வார்டில் குளிர் சாதன வசதி செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் அந்த வசதி இல்லாததால் காற்றோட்டத்திற்காக அறைக் கதவுகள் திறந்து வைக்கப் படுவதாக் கூறப்படுகிறது. இதனால், கொசு, ஈ போன்றவை உட்சென்று விடுகின்றன. கழிவறையில் இருந்தும் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் நிலை மேலும் பாதிப்படைகிறது.

வாமர் கருவி...
வெப்பம் தரும் கருவியான வாமர் ஒன்றில் ஒரு குழந்தை தான் வைக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறை காரணமாக ஒரே வாமரில் இரண்டு முதல் 4 குழந்தைகள் வரை வைக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.

சலைன் இணைப்புகள்...
இதனால் ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்று எளிதாக மற்றொரு குழந்தைக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், குழந்தைகள் கை, கால்களை உதறும் போது அருகில் உள்ள குழந்தையின் சலைன் இணைப்புகள் பிடுங்கப்பட்டு இரத்தப் போக்கு ஏற்படுகிறது.

ஜெனரேட்டர் வசதி...
ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்ட போதும், மின்சாரம் தடை பெற்றதும் தானாகவே அவை இயங்காத காரணத்தால், வெண்டிலேட்டர், வாமர் போன்ற கருவிகள் மீண்டும் இயங்க கால தாமதம் ஆகிவிடுகிறது. இதனால், அபாய நிலையில் உள்ள குழந்தைகள் மேலும் அபாயகரமான நிலைக்கு தள்ளப் படுகின்றன.

காவலர்களின் பணி...
குழந்தைகள் பிரிவுக்கு ஆக்ஸிஜன் வாயு வழங்கும் சிலிண்டர்கள் தீர்ந்துவிட்டால் அவற்றை மாற்ற வார்டின் காவலர்கள்தான் செல்லும்நிலை உள்ளது. ஓரிரு காவலர்கள் மட்டுமே இந்த வார்டுக்கு உள்ள நிலையில் அவர்கள் சிலிண்டர் மாற்ற செல்லும் இடைவெளியில் குழந்தைகளின் உறவினர்கள் வார்டுக்குள் நுழைந்துவிடுவதால், தொற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications