ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய விஜயபாஸ்கர்.. அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ்?
சென்னை: வருமான வரித்துறை ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைமைச் செயலர் ராமமோகனராவ் வீட்டிலும், அலுவகத்திலும் ஐடி ரெய்டு நடந்த பிறகு, அவரது பதவி பறிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. அதைப்போல இப்போது விஜயபாஸ்கர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பறிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரனின் வலது கரம் போல செயல்பட்டு வருகிறார். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் வெள்ளமென பாய்வதற்கு இவர்தான் காரணம் என்கிறது எதிர் தரப்பு. பல குவாரிகளில் பணத்தை பதுக்கி வைத்து சப்ளை செய்வதாக இவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவேதான் குவாரிகளில் கமாண்டோ படை பாதுகாப்புடன் ரெய்டு நடந்தது.
டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிதான் பறிபோகும். எனவே எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு உத்தரவுப்படி, விஜயபாஸ்கரை அமைச்சரவைிலிருந்து கழற்றிவிடவே பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.