நெல்லையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சென்னையில் தற்கொலை– காரணம் என்ன?
சென்னை: பல்லாவரத்தில் நெல்லையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் தென்காசி பாடியநல்லூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் சங்கரரமணன் பி.இ பட்டதாரி. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார்.

நண்பர்கள் வினோத், சுப்பிரமணி ஆகியோருடன் சென்னை பழைய பல்லாவரம் துரைக்கண்ணு சாலையில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் வெளியில் சென்ற சமயத்தில், குளியல் அறையில் உள்ள வெண்டிலேட்டர் ஜன்னலில் தூக்குப்போட்டு சங்கரரமணன் தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் வீட்டிற்கு வந்த நண்பர்கள் குளியல் அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து நீண்ட நேரமாக கதவை தட்டினர்.
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது சங்கரரமணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
பல்லாவரம் போலீசார் சங்கரரமணன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தை ரத்து செய்து விட்டார். அதன்பின்னர் நண்பர்களுடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்தநிலையில் நண்பர்கள் வெளியில் சென்றபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications