சபரிமலை யாத்திரை ஜெயலலிதா படத்துடன் இருமுடி சுமந்து சென்ற ஐயப்ப பக்தர்கள்!
எடப்பாடி: எடப்பாடியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்களின் இருமுடியுடன் ஜெயலலிதாவின் புகைபடத்தையும் சுமந்து யாத்திரை போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திகையில் மாலை அணிந்து மண்டலபூஜைக்காக விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள், யாத்திரை கிளம்பும் போது நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் அடங்கிய இரு முடி கட்டி அதனை பக்தியுடன் சுமந்து சபரி மலை யாத்திரை செல்வது வழக்கம்.

ஆனால் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தங்களின் இருமுடியுடன் ஜெயலலிதாவின் படத்தையும் சுமந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகே உள்ளது ஆடையூர் பக்கநாடு. இப்பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குருசாமி வெங்கடாசலம் தலைமையில் சபரிமலை செல்வதற்காக துளசி மாலை அணிந்து விரதம் இருந்தனர்.
அவர்கள் வியாழக்கிழமையன்று இரவு சபரிமலை செல்ல தயாரானார்கள். அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அபிஷேக பொருட்கள் கொண்ட இரு முடி பையுடன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் புகைப்படத்தையும் சுமந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டனர்.
கடவுள் யாத்திரையில் கூட கட்சியை புகுத்தி வினோதமாக சபரிமலை யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களைக் காண அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் எந்தவித பேதங்களும் இன்றி ஜாதி, கட்சி, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் எதுவும் இன்றி சபரிமலை சென்று வருவது வழக்கம். இதனால் எந் வித சிக்கலும் இருப்பதில்லை.
தற்போது புதிதாக அரசியல் தலைவர் ஒருவரின் புகைப்படத்தை சுமந்து செல்வதால் இனி பிற கட்சியினரும் கடவுளை காண செல்லும் போது கட்சித்தலைவரின் புகைப்படத்தை சுமந்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டனை காணப்போகும் போதும் அரசியல் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் பக்தர்கள்.












Click it and Unblock the Notifications