அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 7–வது முறையாக போட்டியின்றி தேர்வானார் ஜெயலலிதா
சென்னை: அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறுகிறது. இந்த ஆண்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் தேர்தல் ஆணையருமான விசாலாட்சி நெடுஞ்செழியனிடம், முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
24ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 2,467 பேர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நேற்று ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியின்றி தேர்வு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா தவிர வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் 7-வது முறையாக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவுக்கு வரவேற்பு
இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா மதியம் 12 மணியளவில் தலைமை கழகத்துக்கு வந்தார். அவருக்கு செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெடித்த பட்டாசுகள்
பெண் தொண்டர்கள் ஆரத்தி எடுத்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. கூடி நின்ற தொண்டர்கள் ‘புரட்சித் தலைவி அம்மா' வாழ்க என்று கோஷமிட்டனர்.
பொதுச்செயலாளராக தேர்வு
முதல்வர் ஜெயலலிதா அ.தி.முக. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை அ.தி.மு.க. தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நேற்று பிற்பகல் 12.15 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.
பூங்கொத்து
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்தனர். அப்போது தொண்டர்கள் கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா வாழ்க என்று உற்சாகமாக குரல் எழுப்பினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.