திட்டமிட்டபடி செப். 7 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 7 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் முக்கியமாக 3 கோரிக்கைகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளன. அதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியம் பெறுவோரை கால முறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்பது மிக முக்கிய கோரிக்கைகள்.
இவற்றை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து அரசு தரப்பில் அக்கறை காட்டாமல் இருந்தனர். படிப்படியாக போராட்டங்களை தீவிரப்படுத்தி வந்த அந்த அமைப்பு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. அதில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அரசுப் பணிகள் முடங்கின.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோவின் பிரதிநிதிகளை அழைத்து பேசாவிட்டால் செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதனால் கடந்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேசினர். அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தது. இதன்படி 27 சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகலில் ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேசினர். இந்நிலையில் முதல்வரை சந்தித்த ஜாக்டோ நிர்வாகி இளமாறன் போராட்டம் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியுள்ளார். நாளைய தினம் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும், செப்டம்பர் 8ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல், ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.