Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென உடலை துளைத்த குண்டுகள்.. 10 நிமிடத்தில் 1000 பேர் பலி..ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 2023 ஏப்ரல் 13.. சுதந்திர காற்றை சுவாசித்து சுகமான வாழ்க்கை நடத்தும் நாம் அனைவரும் அப்படியே பின்நோக்கி சென்று 104 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த நாளை நிச்சயம் எண்ணி பார்க்க வேண்டும். அன்றைய தினம் இன்றுபோல் இத்தனை இனிமையாக விடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பச்சிளம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை சுமார் 1000க்கும் அதிகமானவர்களை ஆங்கிலேயர்கள் கொடூரமாக துப்பாக்கியலால் சுட்டு கொன்ற இந்திய வரலாற்றின் கருப்பு நாள் தான் இது. ஆம், நாட்டின் விடுதலைக்காக 1919 ஏப்ரல் 13ல் ஆங்கிலேயர்களிடம் பலி கொடுத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த துயரமான நாள் தான் இன்று.

ஆங்கிலேயர்களை எதிர்க்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நேரம் அது. அதாவது ஆங்கிலேயர்களிடம் சிக்குண்டு சுதந்திரம் இன்றி பல இன்னல்களை நம் முன்னோர்கள் சந்திக்க தொடங்கினார். கொடுமைகள் எல்லைமீறவே உயிர்தியாகம் செய்தாவது நம் அடுத்த தலைமுறையினருக்கு சுதந்திர இந்தியாவை பெற்று கொடுக்க இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என வயது, பாலின பாகுபாடு இன்றி போராட்ட களத்தில் களமிறங்கிய ஆண்டு தான் 1919.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்க்க இந்தியர்கள் ஒன்றாக இணைந்த தருணம் தான் அது. ஒருபுறம் ‛தேசப்பிதா' மகாத்மா காந்தி தலைமையில் விடுதலைக்கான அறவழி போராட்டங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மெல்ல மெல்ல பரவி வந்தது. இதை பார்த்து அய்யய்யோ இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்களே என ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர்.

Jallianwala Bagh Massacre Tragedy Incident: Here’s What Happened 104 Years Ago

ரவுலட் சட்டம்: இந்தியர்களை கட்டுப்படுத்தி, தொடர்ந்து இந்தியாவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பிய ஆங்கிலேயர்களால் இதனை பொறுத்து கொள்ள முடியவில்லை. இதற்காக ரவுலட் எனும் சட்டத்தை கொண்டு வந்தனர். இந்த சட்டம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தியர்களை எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்ய வழிவகுத்தது. அதன்படி ஏராளமான தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். குறிப்பாக சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லேவ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக்: இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவை அடக்கிஆள நினைத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது பஞ்சாபின் அமிர்தசரஸில் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவில் நடந்தது. பஞ்சாபி அறுவடை திருவிழாவான பைசாகியையொட்டி ரவுலட் சட்டத்தை எதிர்க்க சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். இதில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அடங்குவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீக்கியர்களாக இருந்தனர்.

விடுதலை முழக்கம்: அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை வீழ்த்தி விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் கோட்டையை நோக்கி பல ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். வயது, பாலின பாகுபாடு இன்றி ஆயிரணக்கணக்கானவர்கள் ஜாலியன் கோட்டையில் குவிந்தனர். சுதந்திர போராட்டத்தை முன்னின்றி நடத்திய வீரர்கள் வீரஉரையாற்றி அனைவருக்கும் விடுதலை எண்ணத்தை மேலோங்க செய்து கொண்டிருந்தனர். புரட்சிகரமான உரையை பலரும் உடல் சிலிர்த்தபடி கேட்டு கொண்டிருந்தனர். ரவுலட் சட்டத்தை திரும்ப பெற ஆங்கிலேயர்களை வலியுறுத்தியதோடு, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம் ஒற்றுமைக்கு மத்தியில் ஆங்கிலேயர்களின் தந்திரங்கள் எதுவும் பலிக்காது. ஒற்றுமை மட்டுமே விடுதலைக்கு வழிவகுக்கும் என உணர்ச்சி உரையாற்றி கொண்டிருந்தனர்.

ஜெனரல் டயர்: இந்த சமயத்தில் தான் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுதலை முழக்கமிட்டு வரும் செய்தி அந்த மிருக்குணம் கொண்ட கொடூரரான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயருக்கு கிடைத்தது. உடனே கோபத்தின் உச்சிக்கு சென்ற டயர் ஜாலியனில் கூடிய அனைவரின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். மேலும் நேரடியாக டயர் மற்றும் ஆங்கிலேய சிப்பாய்கள் 100க்கும் அதிகமானவர்கள் ஜாலியன் வாலாபாக் பூங்காவுக்கு வந்து குவிந்தனர்.

துப்பாக்கிச்சூடு: இந்த கும்பல் ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் எந்த எச்சரிக்கையும் இன்றி கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. அதுவரை உணர்ச்சிமிகு உரையை கேட்ட மக்கள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பூங்காவில் இருந்து வெளியேற ஒருஒரு வழி மட்டுமே இருந்தது. அதுவும் மிகவும் குறுகலாகவே இருந்தது. இதனால் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள அனைவரும் வெளியே ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் வெளியே செல்ல முடியாத வகையில் வழி பூட்டப்பட்டு இருந்தது. இதனால் பலரும் சுவர் ஏறி தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அது அவர்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

Jallianwala Bagh Massacre Tragedy Incident: Here’s What Happened 104 Years Ago

துடிதுடித்து மரணம்: மேலும் ஒரே சமயத்தில் நுழைவுவாயிலில் ஏராளமானவர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழ துப்பாக்கிச்சூடு மட்டும் நிற்கவே இல்லை. குண்டுகள் அங்கு கூடியிருந்த சிறுவர்கள், சிறுமிகள் முதல் முதியவர்களின் உடல்களை துளைத்தன. அவர்கள் கீழே சரிந்து விழுந்து துடிதுடித்து இறக்க, மற்றவர்கள் உயிரை காக்க பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். குருவிகளை சுடுவதுபோல் ஈவு இரக்கமின்றி பிரிகேடியர் ஜெனரல் டயர் மற்றும் அவரது ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டி ஏராளமானவர்கள் துடிக்க துடிக்க இறந்தனர்.

கிணற்றில் விழுந்து பலி: மேலும் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க பலரும் தங்களின் குழந்தைகளோடு அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தனர். இதனால் அந்த கிணறும் கூட பிணக்குவியல்களால் நிரம்பியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய செய்ததோடு மக்கள் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

1000 பேர் பலி: இந்த ஜாலியன் வாலாபாக் துயரத்தில் 379 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இருப்பினும் 1000க்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெறும் 10 நிமிடத்தில் சுமார் 1,650 தோட்டாக்களை துப்பாக்கி மூலம் டயர் மற்றும் அவரது படையினர் சுட்டு படுகொலையை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

டயரின் குரூரம்: இந்த துயரத்தை நிகழ்த்தியதுக்கு எதிராகவும், சம்பவம் குறித்து விசாரிக்கவும் ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு டயரிடம் விசாரித்தது. அப்போது டயர் தனது இரக்கமற்ற செயலுக்கு கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக, ‛‛நான் சுட்டேன். மக்கள் சிதறிபோகும் வரை, உயிர் போகும் வரை தொடர்ந்து சுட்டேன். மக்களின் நெஞ்சை குறிப்பார்த்து மீண்டும் மீண்டும் சுட்டேன். சொல்லப்போனால் நான் நினைத்ததுபோல் அதிகமானவர்களை சுடவில்லை. என்னிடம் மட்டும் கூடுதலாக படைகள் இருந்திருந்தால் இன்னும் அதிகமானவர்களை வீழ்த்தி இருப்பேன்'' என குரூரமாக கூறினார். இதை கேட்ட அந்த விசாரணை குழு அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்ததே தவிர அவருக்கு எந்த தண்டனையையும் பரிந்துரைக்கவில்லை.

Jallianwala Bagh Massacre Tragedy Incident: Here’s What Happened 104 Years Ago

திருப்பு முனை: இருப்பினும் தொடர்ந்து இந்தியாவில் செயல்பட்ட டயர் அதன்பிறகு சொந்த நாட்டுக்கு சென்றார். இருப்பினும் அவரது குரூரமான செயலை பஞ்சாப் உள்பட இந்திய மக்கள் மறக்கவில்லை. சொல்லப்போனால் டயர் மீதான கோபம் மட்டும் தணியவேயில்லை. இரக்கமற்ற மிருக கொண்ட டயருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீ பலரது மனதில் பற்றி எரிய தொடங்கவே அவர் பிரிட்டனுக்கு சென்றார். மேலும் இந்தியர்களின் மனதில் ஆறாத துயரமாக மாறிய இந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நினைவிடம்: 1919 ஏப்ரல் 13ல் நமக்கு சுதந்திரம் கிடைக்க முன்னோர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் தான் இன்று. இந்த கருப்பு நாளில் நமக்கு விடுதலை பெற்று கொடுக்க உயிர்தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தற்போது ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

Jallianwala Bagh Massacre Tragedy Incident: Here’s What Happened 104 Years Ago

மன்னிப்பு கோராத பிரிட்டன்: இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 104 ஆண்டுகள் ஆன நிலையில் உலக வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக இன்றுவரை இருக்கிறது. ஆனாலும் பிரிட்டன் அரசு மட்டும் இன்று வரை மன்னிப்பு கோரவில்லை. ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத், பிரிட்டன் முன்னாள் பிரதமர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தாலும் கூட இன்னும் மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை.

டயர் இறந்து எப்படி?: முன்னதாக ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அடுத்த 9 ஆண்டுகள் டயர் இறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்தியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்தியாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ராணுவ பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு டயர் கடந்த 1927 ஜூலை மாதம் 23ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+