ஜல்லிக்கட்டு ஆதரவு அமைதி போராட்ட களத்தில் உங்கள் 'ஒன்இந்தியா தமிழ்'!
தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, 'ஒன்இந்தியா தமிழ்' இணையதள ஊழியர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். தமிழகமெங்கும் ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் நேற்றே அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கருப்பு சட்டை அணிந்து கை கட்டியபடி 10 நிமிட நேரம் மவுனமாக நின்றனர். இந்த கோரிக்கையின் பின்னால் உள்ள நியாயத்தின் அடிப்படையில், 'ஒன்இந்தியாதமிழ்' ஊழியர்களும் மவுன அறவழி போராட்டத்தில் பங்கேற்றனர்.
சரியாக மாலை 5 மணிக்கு அலுவலக வளாகத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வலியுறுத்தி ஒன்இந்தியா தமிழ் இணையதள ஊழியர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர். கருப்பு சட்டை அணிந்தபடி, கைகட்டி, மவுனமாக நின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகையும் ஏந்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக் பக்கத்தில் நேரலையாகவும் காண்பிக்கப்பட்டது. வாசகர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்து கமெண்டுகள் குவிந்தன. பத்தே நிமிடங்களில் 2500க்கும் மேற்பட்ட லைக்குகளை வாரி வழங்கி வாசகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த அமைதி போராட்டத்தை பார்த்து அலுவலகங்களில் தாங்களும் ஆங்காங்கு எழுந்து நிற்பதாக வாசகர்கள் பலரும் கமெண்டுகளில் பதிவிட்டனர். தமிழர் பாரம்பரியத்தை காக்க வலியுறுத்திய ஒரு நிகழ்வில் உங்களுடன் கை கோர்த்ததில் 'ஒன்இந்தியாதமிழ்' பெருமிதம் அடைகிறது.