ராமச்சந்திர ஆதித்தன் மரணம் பத்திரிக்கைத் துறைக்கு பேரிழப்பு - ஜெ.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பிரபல பத்திரிகை அதிபரும், மாலை முரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் ராமச்சந்திர ஆதித்தனுக்கு உண்டு. மாலை முரசு நாளிதழின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன், பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டு பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றார்.
கண்மணி மாத நாவல், பொன்மணி மாத இதழ் ஆகியவற்றை நடத்தி வரும் ராமச்சந்திர ஆதித்தன், கதிரவன் என்ற நாளிதழையும், தேவி என்ற வார இதழையும் சிறிது காலம் நடத்தி வந்தார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்காக இவர் ஆற்றிய பங்கினை நான் நன்கு அறிவேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே நாட்டு நடப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிந்தவர் ராமச்சந்திர ஆதித்தன்.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ராமச்சந்திர ஆதித்தனின் மறைவு பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
பா.ராமச்சந்திர ஆதித்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications