ஜெயலலிதா மரணம்: நீதிமன்ற விசாரணை வேண்டும் - சுப.உதயகுமார்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்ற விசாரணை கோரி பச்சைத் தமிழகம் கட்சி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ தாமாகவே முன்வந்து ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
தமிழக மக்களாகிய நாங்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 75 நாட்களாக தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், மர்மமான முறையில் இறந்திருப்பதையும் மிகவும் சந்தேகிக்கிறோம். அப்பல்லோ மருத்துவமனை, மாநில அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சில மத்திய அமைச்சர்கள், திருமதி. சசிகலா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த மர்ம மரணத்தில் சேர்ந்து இயங்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.
ஒரு மிக முக்கியமான குற்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ தாமாகவே முன்வந்து இம்மரணம் குறித்து ஒரு விசாரணை நடத்த வேண்டும். இந்நடவடிக்கை இந்தியாவின் சனநாயகக் கட்டமைப்பை போற்றிப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது.