'ஐயா' மக்களை படி, படின்னு சொன்னார், 'அம்மா'வோ குடி, குடி என்கிறார்: குஷ்பு
திருவள்ளூர்: காமராஜர் மக்களை படி, படி என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவோ குடி, குடி என்கிறார் என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்த கையோடு திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலை ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும். மேலும் திருவள்ளூரில் மேம்பாலம் அமைக்கப்படும். கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதை தான் சொல்வார்.
திட்டங்கள்
கடந்த திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடனை கருணாநிதி தள்ளுபடி செய்தார். பெண்கள் சுயமாக இருக்க உதவியாக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா அந்த திட்டத்தை முடக்கிவிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. இலவச செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயம் ஏமாற்று வேலையே. அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வெள்ள நேரத்தில் கூட ஜெயலலிதா மக்களை சந்திக்கவில்லை.
காமராஜர்
காமராஜர் மக்களை படி, படி என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவோ குடி, குடி என்கிறார். வரும் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கருணாநிதி 6வது முறையாக முதல்வர் ஆவார்.