திமுக தேர்தல் அறிக்கையை மனதுக்குள் பாராட்டியே இருப்பார் ஜெயலலிதா: கருணாநிதி
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா முழுவதுமாக படித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அறிக்கையை அவர் குறை சொன்னாலும், மனதளவில் தேர்தல் அறிக்கையை பாராட்டியே இருப்பார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக தேர்தல் அறிக்கை, 100 தலைப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்றோரும், சான்றோரும், அனைத்து கட்சி தலைவர்களும் வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா மட்டும், அதில் நான் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டதாக பேசியிருக்கிறார். 'தமிழக அரசின் மொத்த வருவாயில், 94 சதவீதம் அரசு அலுவலர்களின் ஊதியத்திற்காக செலவழிக்கப்படுகிறது' என அரசு அலுவலர்களின் பணித்திறனை இழிவுப்படுத்தி, அத்தனை அரசு அலுவலர் சங்கங்களும் ஜெயலலிதாவின் கூற்றை எள்ளி நகையாடியதை, ஜெயலலிதா மறந்து விட்டு, 'திமுக தேர்தல் அறிக்கையில் தவறு உள்ளது' என கூறியிருக்கிறார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை முற்றிலுமாகத் தடைசெய்வதற்குப் பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறியுள்ளது.
ஆனால், அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தது என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
2011 நவம்பரில் நான் வெளியிட்ட அறிக்கையில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது மிகவும் ஆபத்தானது என்று அறிக்கை விடுத்தேன். அன்னிய முதலீட்டுக்கு எதிராக 2012 செப்டம்பரில் வேலைநிறுத்த போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று அறிவித்தேன். இதன் பிறகு 2012 நவம்பரில், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னையில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அன்னிய முதலீடு தொடர்பாக விவகாரங்களை விளக்கினார்.
அதன் பிறகு நான் வெளியிட்ட அறிக்கையில், "அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாநில அரசை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறியிருப்பதால், தமிழகத்துக்கும், வணிகர்களுக்கும் எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை. எனவே அன்னிய முதலீடு தொடர்பாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உடனடியாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட்டால், அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை எண்ணிப் பார்த்து, இந்தப் பிரச்னையில் ஆதரவு தருகிறோம்' என்று கூறினோம்.
ஆனால் திமுக கூறிய காரணங்களை அப்படியே மறைத்துவிட்டு திமுகவைக் குற்றம்சாட்டி தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியுள்ளார். எப்படியோ திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக முதல்வர் படித்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்று தான். பிரசாரத்திற்காக அதன் மீது குறை சொன்னாலும், மனதளவில் தேர்தல் அறிக்கையை பாராட்டியே இருப்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications