முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய அரசின் அனுமதி பெறுகிறார் ஜெ.?
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இது வழக்கமான நடைமுறை சந்திப்பு எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் அதிமுகவை மத்திய அமைச்சரவையில் பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுடன் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது அதிமுக.

பாஜகவின் வியூகம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அதிமுகவை சேர்ப்பதன் மூலம் ராஜ்யசபாவில் மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என்பது பாஜகவின் ஒரு வியூகம். மற்றொன்று தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் செல்வாக்கு உள்ள இடங்களில் எளிதாக பாஜக வெல்ல முடியும்; சட்டசபை தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு ஆறுதலாக இருக்கும் என்பதாகும்.

2 முக்கிய கோரிக்கைகள்
இதனிடையே டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஜெயலலிதா முன்வைக்க உள்ளார். இதில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது என்ற கோரிக்கைகள் மிக முக்கியமானவையாகும்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக..
மத்திய அரசும் அதிமுகவின் ஆதரவும் கூட்டணியும் தேவை என கருதுவதால் இந்த 2 கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஒப்புதல் தரக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த 2 கோரிக்கைகளை சாதித்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அணிக்கு பெரும் சாதகத்தை ஏற்படுத்தும் என்பதுதான் ஜெயலலிதா போடும் கணக்காம்.

பிடிவாதம் காட்டாத கேரளா
அதுவும் கேரளா முதல்வர் பிணராயி விஜயன், தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் புதிய அணையை கட்ட முடியாது என கூறியிருக்கிறார்... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவை ஆளும் இடதுசாரிகள் அரசு முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போல மிக மிக கடுமையான நிலைப்பாட்டை எடுக்காது என்றே கூறப்படுகிறது. ஜெயலலிதா முன்வைக்கப் போகும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியையும் ஜெயலலிதா அறிவிக்கவும் கூடும் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications