விவசாயிகள் விஷயத்தில் ஜெ. ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்
சென்னை: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் தமிழக அரசு ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளை பின்பற்றினால் தான் தற்கொலைகளை தடுக்க முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரியலூர் மாவட்டம் ஒரத்தூரில் நிதி நிறுவனக் கடனில் வாங்கப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் அழகர் என்ற விவசாயி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடனை செலுத்தாத பாலன் என்ற விவசாயியை காவலர்கள் தாக்கி இழுத்துச் சென்றதால் ஏற்பட்ட வேதனை விலகுவதற்கு முன்பே இந்த சோகம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் இரு ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் கடன் பெற்று அதில் டிராக்டர் வாங்கியுள்ளார். அதில் ரூ. 5 லட்சம் அசலும், வட்டியும் செலுத்திய அழகர் ரூ.2 லட்சம் மட்டும் பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி குண்டர்களுடன் ஒரத்தூர் வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அழகரை கடுமையாக தாக்கியதுடன், தரக்குறைவாகத் திட்டி விட்டு டிராக்டரை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் மனம் உடைந்த அழகர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தஞ்சை மாவட்டத்திலும், அரியலூர் மாவட்டத்திலும் அடுத்தடுத்து விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அழகரின் உயிரிழப்பும் விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. விவசாயிகள் மீதான தாக்குதலையும், அதற்கு காரணமான வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உழவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்தாததற்காக உழவர்களின் டிராக்டர் உள்ளிட்ட உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், கடனை செலுத்த முடியாத உழவர்கள் நிதி நிறுவன குண்டர்களால் தாக்கப்படுவதும் இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. பல ஆண்டுகளாக இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவசாயிகளிடமிருந்து டிராக்டர் போன்ற உடைமைகள் பறிக்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்பட்ட கடன்களுக்காகவும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக்த்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாகவே வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே
மீளமுடியாத கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு புதிதாக இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட இழப்பும் சேர்ந்து கொண்டதால் தான் அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டில் 623 பேர், 2012ஆம் ஆண்டில் 499 பேர், 2013ஆம் ஆண்டில் 105 பேர், 2014ஆம் ஆண்டில் 68 நில உரிமையாளர்கள், 827 விவசாயத் தொழிலாளர்கள் என 895 பேர், 2015 ஆம் ஆண்டில் 300 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமை தான் காரணம் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் அவமானங்களும் தற்கொலைகளும் தொடர்கின்றன.
ஆந்திராவிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகவே இருந்து வந்தது. ஆனால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு பதவியேற்ற பின்னர் ரூ.50,000 வரையிலான கடன்கள் ஒரே தவணையில் முழுமையாகயும், அதற்கும் கூடுதலான பயிர்க்கடன்களில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சமும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல், தெலுங்கானாவில் ரூ.1 லட்சம் வரையிலான கடன்களை முழுமையாகவும், அதற்கும் கூடுதலான கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலும் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உழவர்கள் தற்கொலை குறைந்திருக்கிறது. இதேபோன்று தமிழகத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் தான் தற்கொலைகளை தடுக்க முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications