அட கொடுமையே.. வீடியோ கான்பரன்சிங்கில் கலெக்டர் அலுவலகத்தை திறந்த ஜெ.வுக்கு 2 கி.மீ வாழை மர வரவேற்பு
திருப்பூர்: சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திருப்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று திருப்பூரில் 2 கிலோமீ்ட்டர் தூரத்திற்கு வாழை மரங்களை நிறுத்தி வைத்து அதிமுகவினர் செய்த அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரும் கொதிப்புக்குள்ளானார்கள்.
அதை விட பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு குளத்தை ஆக்கிரமித்துத்தான் இந்த கலெக்டர் அலுவலக கட்டடமே கட்டப்பட்டுள்ளது என்பதுதான். சென்னையில் இருந்தபடி திறந்து வைக்கும் ஜெயலலிதாவை வரவேற்று எதற்கு இத்தனை அமர்க்களம், ஆர்ப்பாட்டம் என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, பல்லடம் ரோடு எல்.ஆர்.ஜி கல்லூரி பின்புறம் உள்ள குளத்தை ஆக்கிரமித்து, ரூ.52.14 கோடியில் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் தாண்டி, தரைத்தளம் மற்றும் ஏழு தளம், ஐந்து கூட்ட அரங்கு, வி.ஐ.பி. அறைகளுடன் கட்டுமான பணியை முடித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா இந்தக் கட்டடத்தை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். ஆனால் அதிமுகவினர் திருப்பூரில் செய்த அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக கொடி, தோரணத்தை கட்டி வைத்தனர். வாழை மரங்களை வெட்டி கொண்டு வந்து, சாலையின் இருபுறமும் கம்பங்களில் கட்டி வைத்தனர். ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிளக்ஸ் போர்டுகளும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஜொலித்தன. அதுபோக, அம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை வாழ்த்தும் பேனர்களும் நகர் முழுவதும் பளிச்சிட்டது.
மொத்தத்தில் இந்த அட்டகாச ஆடம்பரத்தால் பல்லடம் சாலையில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. திருப்பூர் நகரிலும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர் அதிமுகவினர்.
நாடு வெளங்கும்??












Click it and Unblock the Notifications