11 மீனவர்கள், 90 மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்: மோடிக்கு ஜெ., கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த 2ம்தேதி அதிகாலை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் உட்பட இலங்கை அரசின் வசமுள்ள தமிழக மீனவர்கள் 11 பேரையும், 90 மீன்பிடி படகுகளையும் பத்திரமாக விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டணம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த 1ம்தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் 2ம்தேதி அதிகாலை கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது குறித்து தங்களின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக, இந்த ஒப்பந்தங்களின் அரசியல் சாசன ரீதியான செல்லத்தக்க தன்மை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திடம் இருப்பதால் இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை பிரச்சினையை தீர்வு காணப்பட்ட ஒன்றாக இந்திய அரசு கருதக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுடன் 90 மீன்பிடி படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளன. இந்த படகுகள் பிடித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருப்பதால் மோசமாக சேதமடைந்திருக்கும். இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அளவிட முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படகுகளை விரைவாக மீட்பதுடன் அவற்றை இந்திய அரசு புதுப்பித்து மீனவர்களிடம் வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் இந்த பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கான சில குறிப்புகளை கடந்த 3.6.14 அன்றும், 7.8.15 அன்றும் உங்களிடம் கொடுத்த மனுவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் கச்சத்தீவை மீட்பதும் ஒன்றாக உள்ளது. மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ.1,520 கோடி நிதியையும், கடலை ஆழப்படுத்தும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.10 கோடி தொகை தர வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளேன். இவற்றை நீங்கள் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
இந்நிலையில் 2-06-2016ம்தேதியன்று அதிகாலை பிடிக்கப்பட்டிருக்கும் 4 மீனவர்கள் உட்பட 11 மீனவர்களையும், அவர்களின் 90 மீன்பிடி படகுகளையும் மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது விஷயத்தில் தங்களின் உடனடி தலையீட்டையும் எதிர்பார்த்து, சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications