அதில் என்ன தப்பு.. பொன்னார் குறித்து ஜெயக்குமார் சொன்னது சரிதான்.. முதல்வர் பரபரப்பு பேட்டி!
முன்னாள் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வைத்த விமர்சனம் சரியானதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முன்னாள் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வைத்த விமர்சனம் சரியானதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
நாகர்கோவிலில் களியக்காவிளை பகுதியில் எஸ்.ஐ வில்சன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது குறித்து முன்னாள் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது.
தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது. அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
தேசிய கட்சியில் இணைகிறாரா ஜெ.தீபா... ? அதிமுக கதவை திறக்காததால் கடும் விரக்தி
ஜெயக்குமார் பதில்
இதற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து இருந்தார். அதில், அரசை குற்றஞ்சாட்டுவதை பொன். ராதாகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் பதவி கிடைக்காத விரக்தியில் இப்படி பேசுகிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது. பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை, என்று குறிப்பிட்டார்.
பேட்டி
இந்த நிலையில் ஜெயக்குமாரின் கருத்துக்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் குடி உரிமை சட்ட திருத்தத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். முக்கியமான இதனால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். யாரும் பயப்பட தேவையில்லை.
மக்கள் நம்ப வேண்டாம்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பொய்களை பரப்பி வருகிறது. ஸ்டாலின் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கி வருகிறார். தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
சரியான கருத்து
பொன்.ராதாகிருஷ்ணன் குறித்த கருத்து குறித்த கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து சரியானதே . அவரின் கருத்தே என்னுடைய கருத்தும். அவரின் கருத்தும் அதிமுகவின் நிலைப்பாடும் சரிதான். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதை பற்றி தவறாக விமர்சிக்க கூடாது. தமிழகத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஏற்படும்.
எல்லை பாதுகாப்பு
தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே தீவிரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை. தமிழகம் முழுக்க போலீஸ் அதிகமாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.