சட்டசபை தேர்தல் விரைவில் வரும் என விஷமத்தனமாக பேசுவதா? ஓபிஎஸ்-க்கு ஜெயக்குமார் கடும் கண்டனம்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என ஓபிஎஸ் பேசியிருப்பது விஷமத்தனமானது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபைக்கு விரைவில் பொதுத் தேர்தல் வரும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு கோஷ்டிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதனிடையே மக்களை சந்தித்து ஆதரவு திரட்டப் போவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்த பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கினார் ஓபிஎஸ்.

விஷமத்தனமானது
அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்றார். இது தொடர்பாக இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் பேசியிருப்பது விஷமத்தனமானது. ஜெயலலிதாவின் ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காக பேசியிருப்பதை அதிமுக தொண்டர் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சந்தர்ப்பவாதம்
ஜெயலலிதாவின் மரணத்துக்கு இப்போது ஓபிஎஸ் நீதி விசாரணை கோருவது சந்தர்ப்பவாத அரசியலாகும். ஓபிஎஸ் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஸ்டாலினுக்கு கண்டனம்
தமிழக அரசு செயல்படவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவதே தாம் செயல்படுவதாக காட்டிக் கொள்ளத்தான். தமிழக சட்டசபைக்கு 2021-ல் தான் தேர்தல் வரும்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
என்னதான் ஓபிஎஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் அந்த அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.












Click it and Unblock the Notifications