வைகோ தாயார் மறைவு - முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வைகோவுக்கு அனுப்பி உள்ள இரங்கல் கடிதம்:
தங்களின் அன்புத் தாயார் திருமதி மாரியம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (6.11.2015) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், திருமதி மாரியம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திருமதி மாரியம்மாள் அவர்களை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு நெல்லை மாவட்டத்திற்கு சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா, கலிங்கப்பட்டியில் வைகோவின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.