6வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 6வது முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். இதில் முறைப்படி பார்த்தால் இது 4வது முறைதான். ஆனால் சிறைக்குப் போனது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பதவி விலகியது ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் இது 6வது முறையாக வருகிறது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தது. அதுவரை கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்த ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாக அதிமுகவில் பலர் திரண்டனர். ஜானகி அம்மாள் தலைமையில் இன்னொரு அணி உருவானது. இருவரும் தனித் தனி சின்னத்தில் தங்களது முதல் தேர்தலை 1989ம் ஆண்டு சந்தித்தனர். அத்தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி அதிக இடங்களைப் பெற்றது. ஜானகி அணி படுதோல்வியைச் சந்தித்தது.

அதன் பிறகு அதிமுக ஒன்றாக இணைந்தது. ஜெயலலிதா பொதுச் செயலாளரானார். அன்று முதல் இன்று வரை அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல் முறையாக ஆட்சியைத் தக்க வைத்த முதல்வராக ஜெயலலிதா உருவெடுத்துள்ளார். இத்தனைக்கும் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் அவர் சாதித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்த ஆட்சி 1996 வரை முழுமையாக நீடித்தது. பிறகு 1996ல் வந்த தேர்தலில் ஊழல் புகார்கள், சொத்துக் குவிப்பு புகார்கள் காரணமாக அதிமுக படு தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் 2001ம் ஆண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து 2002ல் மீண்டும் அவர் 3வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா 4வது முறையாக முதல்வரானார்.
இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் 2014ல் பதவியை இழந்தார். ஆனால் 2015ல் அவர் வழக்கிலிருந்து விடுதலையானதால் ஆர்.கே,நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.
தற்போது 6வது முறையாக முதல்வர் பதவியை வகிக்கப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த வெற்றியை அதிமுகவினர் மாநிலம் எங்கும் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications