'ஆத்தா சத்தியமா' சொல்றேன், 40 தொகுதியிலும் அதிமுகதான் ஜெயிக்கும்- ராமராஜன்
தூத்துக்குடி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஜெயலலிதா வெற்றி பெற்று அவர் பிரதமராகும் அதிசயம் நடக்கப்போகிறது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து நடிகர் ராமராஜன் புதன்கிழமையன்று திருச்செந்தூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருச்செந்தூரில் பேசும்போது எனக்கு சொந்த ஊரில் பேசும் உணர்வு ஏற்படுகிறது. நடிகராக இருந்த என்னை லோக்சபா உறுப்பினராக்கியது இந்த ஊர்தான்.
கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசில், அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்காக ஏதாவது நன்மை செய்ததா. அவர்கள் செய்த ஒரே சாதனை ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியில் பங்கு பெற்று, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி பெற்று, இமாலய ஊழல் செய்தது தி.மு.க. ஆனால் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டது திமுகவின் நன்றி கெட்ட செயலாகும்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியவர் ஜெயலலிதா. நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஒரு அதிசயம், அற்புதம் நடக்க இருக்கிறது.

திறமையான ஆட்சி
தமிழகத்தில் தனித்து நிற்க யாருக்கும் தைரியமில்லை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை யாரும் குறை சொல்ல முடியாது. முந்தைய மைனாரிட்டி திமுக கஜானாவை காலி செய்துவிட்டு சென்றது. ஆனால் ஜெயலலிதா திறமையாக ஆட்சி செய்து வருகிறார்.

காவிரித்தாய்
வரியில்லா பட்ஜெட்டை அறிவித்தார். தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தும் மத்திய அரசை தி.மு.க. கண்டித்தது உண்டா. காவிரி நீர் பிரச்சினையை கெஜட்டில் வெளியிட செய்தார். ஜெயலலிதா. தொலை நோக்கு திட்டம் இல்லாமல் கடந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தமிழகத்தை இருளில் மூழ்கடித்தது. எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் தைரியமாக செயல்படக்கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான்.

யாருக்கும் தைரியம் இல்லை
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பெண்ணை தலைவராக கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அ.தி.மு.க.வை நேருக்கு நேர் சந்திக்க எந்த கட்சிக்கும் திராணி இல்லை. கூட்டணிக்காக மற்ற கட்சிகளை வா வா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் கூட்டணியை இறுதி செய்யவும் முடியவில்லை. வேட்பாளர்களை அறிவிக்கவும் முடியவில்லை.

ஜெயலலிதா பிரதமராவார்
ஜெயலலிதாவின் தொலை நோக்குத்திட்டத்தால் மாணவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர், என அனைத்து தரப்பு மக்களுமே பயனடைந்து வருகின்றனர். மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஒருவர் பாரதப்பிரதமராக வந்தால் தமிழர்கள் அத்தனை பேருக்கும் பெருமை. எனவே கட்சியினர் மட்டுமில்லாமல், நடுநிலையாளர்களும் கட்சி பேதமின்றி ஜெயலலிதா பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறினர்.












Click it and Unblock the Notifications