கிறிஸ்துமஸ்.. ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ் வாழ்த்து!
சென்னை: ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இயேசுபிரானின் போதனைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
"இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இயேசுபிரானின் போதனைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
"நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமா, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர் வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது.
தம் உன்னதமான தொண்டுகளால் தமிழுக்கு வளம் சேர்த்த இம்மாமேதைகளில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை எடுத்துச் சிறப்பித்ததையும், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் தங்கிச் சமயப் பணிகள் ஆற்றிய கால்டுவெல் அவர்கள் வாடிநந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரி திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியதையும்; கிருத்துவ சமயம், தொண்டு சமயம் என்பதைத் தம் வாழ்க்கை மூலம் புலப்படுத்திய கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களைப் போற்றி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு "அன்னை தெரசா மாளிகை" எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியதையும் நினைவு கூர்ந்து கிறிஸ்துவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்:
"உலகெங்கிலும் போராட்டங்களும், துன்பங்களும் நிறைந்த மனித வாழ்வில், இதயக் காயங்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாகவும், மனித குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக, தரணியெங்கும் கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
உயர்ந்த இலட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, ‘அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக! என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துச் செய்தியில்
பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications