ஜெயலலிதாவுக்கு பிறகு பராமரிக்கப்படாத போயஸ் கார்டன் பங்களா.... அதிர்ச்சியில் தொண்டர்கள்
ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது போயஸ் கார்டன் இல்லம் பராமரிக்கப்படாமல் பொலிவற்ற நிலையில் காணப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது போயஸ் கார்டன் பங்களா பராமரிக்காமல் தற்போது களையிழந்துள்ளது தொண்டர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் தாய் சந்தியாவால் போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லம் 1970-களில் வாங்கப்பட்டது. இன்று போயஸ் தோட்டம் என்றாலே ஜெயலலிதாவின் இல்லம் என்ற அளவுக்கு பெயர் பெற்றுள்ளது.

போலீசார்
ஒரு காலத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு அந்த சாலையே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஜெயலலிதாவின் வீட்டையோ அல்லது அந்த தெருவையோ யாராவது ஒரு விநாடிக்கு உற்று நோக்கினால் போதும், உடனே அவர்களை பிடித்து 1008 கேள்விகளை போலீஸார் கேட்டு துளைத்தெடுப்பர்.

பூஜைகள் இல்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அந்த வீட்டில் எப்போதும் பக்தி மணம் கமழும். அன்றாடம் பூஜைகள், யாகங்கள், புனஸ்காரங்கள் என களைகட்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை.

தினகரன் எஸ்கேப்
ஜெயலலிதா வீட்டை அபகரித்திருந்த சசிகலா சிறைக்குப் போய்விட்டார். சிறிது காலம் போயஸ் கார்டன் பங்களாவில் இருந்த டிடிவி தினகரனும் இப்போது பெசன்ட் நகர் வீட்டுக்குப் போய்விட்டார். அங்குதான் அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகின்றன.

கைவிடப்பட்ட பங்களா
ஜெயலலிதாவின் இல்லம் இப்போது கைவிடப்பட்டதாகவே இருக்கிறது. போயஸ் கார்டன் பங்களாவில் இருந்த சில மரங்களும் காய்ந்துவிட்டன. ஏற்கனவே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கை நிறைவேறுவதற்குள் ஜெயலலிதாவின் பங்களா என்னவாகுமோ என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கவலை.












Click it and Unblock the Notifications