இட்லி, சாதம்... இதுதான் ஜெயலலிதாவின் இப்போதைய டயட்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வழக்கான உணவை உட்கொண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையிலேயே உணவு தயாராகிறது. காலை, இரவு நேரங்களில் இட்லி மட்டுமே சாப்பிடுகிறார். சிறிதளவே சாதம் சாப்பிடுவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் சரியாவிட்டாலும் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில், டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரையில் ரத்த மாதிரி, ஸ்கேன் உள்பட 12 வகையான சோதனைகள் எடுக்கப்பட்டுவிட்டன. இதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.
முதல்வரின் உடல்நிலையை கவனிக்க, கார்டனிலேயே போதுமான சிகிச்சைக் கருவிகள் இருக்கின்றன. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு, போயஸ்தோட்டத்திலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். திடீரென மயக்கமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக சசிகலா, இளவரசி, மருத்துவர் சிவக்குமார், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோர் கவனித்து வருகின்றனர். காய்ச்சல் சரியான உடனேயே முதல்வர் ஜெயலலிதா, வீட்டிற்கு போகலாம் என்று கூறி வருகிறாராம். ஆனால் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்தே மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
முதல்வருக்கான உணவுகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்தே தயாராகிறது. கார்டனில் இருந்து எந்த உணவுகளும் செல்லவில்லை. காலை, இரவு நேரங்களில் இட்லி மட்டுமே சாப்பிடுகிறார். சிறிதளவே சாதம் எடுத்துக் கொள்கிறார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் சிங்கப்பூர் செல்கிறார்; அமெரிக்கா செல்கிறார் என உறுதிப்படுத்தாத தகவல்கள் வலம் வந்தாலும், அவற்றில் உண்மையில்லை அவர் நன்றாக இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.