For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓசூரில் கொல்லப்பட்ட காவலர் முனுசாமி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு- ஜெ. அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஓசூரில் நகை கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த அவர் இதனை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும்போது, அவர்கள் கத்தியால் குத்தியதில் தலைமைக் காவலர் முனுசாமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Jayalalithaa announced Rs 1 Crore as solatium to Munusamy family

இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தமிழகம் முழுவதும் காவல்துறையினரிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஜெயலலிதா, ரூ.5 லட்சம் நிதி அளித்து உத்தரவிட்டார்.

இதேபோல் கத்திக்குத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர் தனபால் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் நிதி அளித்து முதல்வர் உத்தரவிட்டார். நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனிடையே இன்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபை விதி 110ன்கீழ் அறிக்கை வாசித்தார். அந்த அறிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டர். முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக்காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக் காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தால் மிகவும் மன வேதனைக்கு ஆளாகிய நான், உயிரிழந்த முனுசாமி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டதுடன் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டிருந்தேன்.

தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டிருந்தாலும், கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த முனுசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு இது போதுமான நிவாரணம் ஆகாது என்பதே எனது திடமான கருத்தாகும்.

எனவே முனுசாமி அவர்களின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இதுபோன்ற வீரதீர செயல்களில் உயிரிழப்பு அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகும் காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகையை உயர்த்தி நிர்ணயிக்கவும், அதற்காக தற்போதுள்ள அரசாணையை மாற்றி புதிய அரசாணையை வெளியிடவும் தலைமைச் செயலருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த முனுசாமியின் மகள் செல்வி ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
Tamil Nadu Chief Minister J.Jayalalithaa has announced Rs 1 Crore as solatium to the family of Munusamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X